சென்னையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் ஆகிய மூன்று போக்குவரத்து வசதிகள் உள்ளன. இந்த மூன்று போக்குவரத்துகளுக்கும் மக்கள் தனித் தனியாக டிக்கெட் எடுத்து பயணித்து வருகின்றனர்.
இப்போது, இவை அனைத்திற்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான செயலியை உருவாக்கும் பணி Moving Tech Innovations Private Limited என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒரே டிக்கெட்டைப் பயன்படுத்தி மூன்றிலும் பயணிக்க வசதியாக கார்டு போன்ற பாஸ் அறிமுகப்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் இந்த கார்டை ரீசார்ஜ் செய்து பயன்படுத்தலாம். கியூ ஆர் கோடை பயன்படுத்தி அனைத்துப் பொதுப் போக்குவரத்திலும் ஒரே டிக்கெட்டுடன் பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
முதற்கட்டமாக, இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் வகையில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.